தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்தது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் முடிக்க தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று சமூக அறிவியல் தேர்வுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.