வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. கட்டிட மேஸ்திரியான இவருக்கு 14 வயதான ரேணுகா என்ற மகள் உள்ளார். வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியே சென்று பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் தந்தை மாரி இது குறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த 21 வயதான யோகேஸ்வரன் என்பவரிடம் செல்போனில் பேசியது தெரிய வந்தது. மேலும், செல்போன் எண்ணை வைத்து யோகேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரிக்கும் போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் யோகேஸ்வரன், ரேணுகாவை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், நேற்று சென்னாவரம் கிராமத்தில் இருவரும் தனிமையில் சந்தித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த யோகேஸ்வரன் ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீசார் நேற்று இரவு சென்று முட்புதரில் இருந்த ரேணுகா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார், யோகேஸ்வரனை விசாரித்து வருகின்றனர்.