தங்கள் பணியாளர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு பிரபல இ.காமர்ஸ் நிறுவனம் ஒன்று 11 நாளுக்கு தொடர் விடுமுறை அளித்துள்ளது.
பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில்தான் அதிகப்படியான விற்பனை நடக்கும் என்பதால் இந்த நேரங்களில் கூடுதல் நேரம் பணிச்சுமை இருக்கும்.
ஆனால் , பிரபல இ.காமர்ஸ் நிறுவனமான மீஷோ .. தங்களின் பணியாளர்களுக்கு 11 நாள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. துர்காபூஜை , தசரா பண்டிகை , தீபாவளி போன்ற அடுத்தடுத்த பண்டிகைகள் வரவுள்ளன. இதனால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. கடைகளில் மட்டுமின்றி ஆன்லைன் விற்பனையும் பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகின்றது. தள்ளுபடி விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு முந்தி வந்து வாங்குகின்றனர்.
மீஷோ என்ற நிறுவனமும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றது. நேரடியாக டெலிவரி செய்துவரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் 11 நாட்கள் தொடர் விடுமுறையை அளித்துள்ளது. இது குறித்து நிறுவன அதிகாரி சஞ்சீவ் பர்ன்வால் கூறுகையில் ’’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒட்டு மொத்த நிறுவனத்திற்கும் 11 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளோம். வரவுள்ள பண்டிகை காலத்தையும் பணி மற்றும் தங்களின் சொந்த குடும்பம் சமநிலையில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து பணியாளர்களுக்கு அக்டோபர் 22 முதல் நவம்பர் 1ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க தங்கள் பணியாளர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் பணியாளர்கள் அனைவரும் செம்ம குஷியில் உள்ளார்கள். ஆரோக்கியத்திற்காக எத்தனை நாள்கள் வேண்டாமானலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், ஆண்-பெண் உள்பட பாலின பேதமுற்று அனைவருக்கும் 30 வாரம் பேறுகால விடுமுறை மற்றும், பாலின மாறுதலுக்கு 30 நாள்கள் விடுமுறை ஆகிய பல்வேறு தொழிலாளர் நலன் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.