கர்நாடக – தமிழக எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக – தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி டோல்கேட் பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கடைக்கு அருகே ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று காலையில் கடை திறக்கப்பட்டு விடுமுறை நாள் என்பதால் வியாபாரம் சூடு பிடித்து நல்ல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பகுதி வர்த்தகர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் மாலை 3.15 மணிக்கு கடையில் வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும் போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியதில் கடை ஊழியர்கள், உரிமையாளர், வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையி்ல் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே இச்சம்பவத்தில் பட்டாசுகளை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி, பிக்அப் வாகனங்கள் 2 மற்றும் இரண்டு இருசக்கரவாகனங்களும் தீவிபத்தில் சிக்கி கருகின.
மேலும், இந்த பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு பட்டாசு கடை அமைக்க அனுமதி உள்ளது. குடோன் அமைக்க அனுமதி இல்லை என்றும் பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.