வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சத்தை செலவு செய்து திருப்பிக் கொடுக்க முடியாமல் போன வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காட்டு நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரியான முருகேசனுக்கு, முசிறியில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஓராண்டுக்கு முன்பு அவரது கணக்கிற்கு, அதே வங்கி கிளையில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. தனது வங்கிக் கணக்கில், 2 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த முருகேசன், அந்த பணத்தை எடுத்து இஷ்டம் போல செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், ‘ஓராண்டிற்கு முன்பு தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட, இரண்டு லட்ச ரூபாய் காணவில்லை’ என்று வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, கணக்குகளை ஆய்வு செய்த மேலாளர், அந்த பணம் முருகேசன் வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதைக் கண்டறிந்தார். இதையடுத்து, வங்கி மேலாளரும், அந்த வாடிக்கையாளரும் சில நாட்களுக்கு முன்பு முருகேசன் வீட்டிற்கு சென்று, பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட விவரத்தை கூறி, பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறியுள்ளனர்.
ஆனால், திரும்ப பணத்தை செலுத்தும் அளவிற்கு முருகேசனுக்கு பண வசதியில்லை. ஆனால், தொடர்ச்சியாக வங்கி தரப்பில் இருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்த முருகேசன், பூச்சி மருந்தை குடித்த நிலையில் வயலில் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.