ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை ஆலோசனை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகியும், பெண் தாதாவுமான
அஞ்சலையை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று மாலை அவரை கைது செய்தர்னர். அவரிடம் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.
விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மற்ற பழி வாங்கும் நபர்களை விட அஞ்சலை அதிக முனைப்பில் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க அஞ்சலைக்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். முதலாவது, தனது காதலரான ஆற்காடு சுரேஷை கொலை செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படும் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க வேண்டும் என நினைத்து பல நாட்களாக ஸ்கெட்ச் போட்டு வந்துள்ளார்.
2-வதாக ஆற்காடு சுரேஷின் மூலம் தாதாவாக உருவெடுத்து, கட்டப்பஞ்சாயத்து
கந்து வட்டியில் ஈடுபட்டு, ஏரியாவில் அசைக்க முடியாத சக்தியாக அஞ்சலை
வளர்ந்துள்ளார். இந்நிலையில், ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு
அஞ்சலையில் செல்வாக்கு ஏரியாவில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அஞ்சலையிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்களே அஞ்சலைக்கு திரும்ப கொடுக்காமலும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களில் அஞ்சலையை மற்றத்தரப்பினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.
அஞ்சலை வட்டிக்கு விட்டு வந்த பணம் ரூ.1.5 கோடிக்கும் மேல் வெளியே முடங்கியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பணம் வாங்கிய நபர்களும் அஞ்சலைக்கு எதிராக தைரியமாக புகாரளித்தும் வந்துள்ளனர். தனது கணவர் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்திலும், தனது தொழில் முழுவதும் முடங்கி போனதால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அஞ்சலை சுற்றி வந்துள்ளார்.
இதனால், ஏற்கனவே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க துடித்து
வந்த திமுக வழக்கறிஞர் அருள் மற்றும் பொன்னை பாலு ஆகியோருடன் கூட்டு
சேர்ந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு த.மா.கா நிர்வாகி ஹரிஹரன் மூலமாக திமுக வழக்கறிஞர் அருள், பொன்னை பாலு
ஆகியோர் அஞ்சலைக்கு அழைப்பு விடுத்ததும், பண உதவி கேட்டதும்
தெரியவந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட அஞ்சலை, அருள் மற்றும் பொன்னை பாலுவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பல லட்ச ரூபாய் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும்,
நேரடியாகவும், ஹரிஹரன் மூலமாகவும் அஞ்சலை பணம் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் அஞ்சலையின் மகள் தமிழ் (எ) தமிழரசி அதே பகுதியைச் சேர்ந்த 5 திருநங்கைகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதற்கு அசல், வட்டி சேர்த்து ரூ.43 லட்சம் வரை திருநங்கைகள் திருப்பிக் கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கைகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அஞ்சலையின் மகள் தமிழ் என்கிற தமிழரசி மீதும், அவரது கணவர் டாட்டூ மணி மீதும் புளியந்தோப்பு போலீசார் கந்துவட்டு தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சம்பமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அஞ்சலையிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக A+ ரவுடி சம்போ செந்திலின் ஆளான த.மா.கா கட்சி நிர்வாகி ஹரிஹரனுடன் அஞ்சலைக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது.? வங்கி மூலமாகவும், நேரடியாகவும் அஞ்சலை எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.