தமிழக அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு அறிவிக்கப்ட்டுள்ள 10% போனசை குறைந்தது 20% ஆக உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10% போனசை குறைந்தது 20% ஆக உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் “போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளிக்கு 10% ( ரூ. 8400) மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது! 2021-22 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக அரசு பேருந்துகளின் இயக்கம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் அதையே கூறி போனஸ் தொகையை 10% என்ற குறைந்த அளவிலேயே வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல!

தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்கப்பட வேண்டிய ரூ.10,000 முன்பணத்தை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. தீபஒளிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்பணத்தை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்! கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.