பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையின் மாடியில் அழுகிய நிலையில், சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதே மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காக்கை குருவிகளை போல ஒரு மருத்துவமனையில் கட்டிடம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு அரசு அமைந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரம் மிக முக்கியமானது. அந்த நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் உடற்கூறு ஆய்வு மையத்தின் மாடியில் சிதைந்த நிலையில் 200 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வர் சவுத்ரி ஜாமென் புத்தரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது அந்த அறையின் மாடியில் குப்பை போல மனித உடல்கள் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து அந்த உடல்களை முறைப்படி தகனம் செய்ய உத்தரவிட்டதோடு முறையாக உடல்களை அகற்றாமல் இதுபோல குவித்து வைத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் முசாமில் பஷீர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது விசாரணையை 3 நாட்களில் முடித்து அறிக்கை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியம் அசார்ப் கூறுகையில், “மருத்துவமனையில் மரணம் அடைந்தவர்களின் உடல்களும், உடல் தான மூலம் பெறப்பட்ட உடல்கள் பல்கலைக்கழக மாணவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டவை என்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவே இவை மேற்கூரையில் வைக்கப்பட்டன எனவும் அரசு விதிகளின்படியே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது” என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.