செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,115 ரூபாயும், சின்ன ரகத்திற்கு 2,160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்,.
இது குறித்து அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார். தண்ணீர் திறந்தவிட்டதோடு நில்லாமல், குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022 – 23-ம் காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பித்திடவும், அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 – 23ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடந்த ஜூன் 26 –ம் தேதி கடிதம் எழுதினார். மேலும், இதுகுறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பியுஸ் கோயலை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 2022-23-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக செப்டம்பர் 1-ம் தேதி அன்றே தொடங்கி நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிய மத்திய அரசின் கடிதம் கிடைக்கப்பெற்றது. இதனால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்முதலுக்குத் தேவையான பணியாளர்கள் தேர்வு, கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றுக்கான திட்டமிடல் தொடர்பான அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.இதனால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,115 ரூபாயும், சின்ன ரகத்திற்கு 2,160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழகத்தில் மட்டும் 52% அதிகரித்த மின்சார கட்டணம்… மக்கள் ரூ.1,130 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை…!