தமிழ்நாட்டில் 27,000 பதவிகளுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மே மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மே மாத இறுதிக்குள் அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழு அமைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட மனுவில், “தமிழகத்தில் 6,420 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 3,471 கோவில்களில் பரம்பரை அறங்காவலர்களும், 2,949 கோவில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 27,362 கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் மீண்டும் இது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது’’ என அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.