எதிர்வரும் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ளும் விதமாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜமாத்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தான் தற்போது முதல் கூட்டம் நிறைவு பெற்றிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஆலோசனை கூட்டம் ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.