கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்தாலும், அதன் புதிய மாறுபாடுகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், உருமாறிய கொரோனா வைரஸை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாறுபாட்டுக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள பதிவில், “CDC கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸின் புதிய பரம்பரையை கண்காணித்து வருகிறது. இதற்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, BA.2.86 ஐ “கண்காணிப்பில் உள்ள மாறுபாடு” என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இதுவரை, ஒரு சில நாடுகளில் இருந்து மாறுபாட்டின் சில வரிசைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ், காலப்போக்கில் மாறுகிறது. பெரும்பாலான மாற்றங்கள் வைரஸின் பண்புகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
BA.2.86 மாறூபாட்டின் தன்மை மற்றும் அதன் பரவலின் அளவைப் புரிந்து கொள்ள கூடுதல் தரவு தேவை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், “நாங்கள் தற்போது 3 ஆர்வமுள்ள வகைகளையும், 7 வகைகளையும் கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வளர்ச்சியடைந்து வருவதால், கொரோனாவை கண்காணிக்கவும் மரபணு சோதனை குறித்து அறிக்கைகளை அளிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சுறுத்தி வரும் XXB.1.5 கோவிட் மாறுபாட்டில் இருந்து 36 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக ஹூஸ்டன் மெத்தடிஸ்டில் உள்ள நோயறிதல் நுண்ணுயிரியல் மருத்துவ இயக்குநர் டாக்டர். எஸ். வெஸ்லி லாங் தெரிவித்துள்ளார்.