சென்னை ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கக் கோரி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிஜலிங்கம், ”பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையான அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 2019இல் அனுமதி கொடுத்தார்கள். கொரோனா காலகட்டத்தில் அனுமதியை புதுப்பிக்க முடியவில்லை. அதன் பிறகு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து, சில மாவட்டத்தில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். பரிசீலனை செய்வதாக கூறினார்.
இதற்கிடையே, கோவிலம்பாக்கம், நன் மங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாக கூறி போர்வெல், பழுப்புகளை துண்டித்து 60 லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை வேலை நிறுத்தம் செய்கிறோம். எங்களுக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஓட்டுநர், உதவியாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. நீண்ட நாள் கோரிக்கையான அனுமதியை வழங்க மனு கொடுத்திருக்கிறோம் பரிசீலனையில் உள்ளது.
பொதுமக்கள் எங்களை மாஃப்பியா என்று சொல்லி தவறான கண்ணோட்டத்தில் தகவல் பரப்புகிறார்கள். நாங்கள் அரசு செய்யக்கூடிய வேலையை தான் செய்து வருகிறோம். அரசாங்கத்திடம் 550 லாரிகள் தான் உள்ளது. எங்களிடத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் லாரிகளுக்கு மேல் உள்ளது. எங்களுக்கு தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வேண்டும்.
இல்லையென்றால், ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், லாரியை இயக்க மாட்டோம் என தீர்மானம் போட்டுள்ளோம். அன்றைய தினம் 15000-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காது. முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை, கேளிக்கை விடுதி, ஐடி நிறுவனம், பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கும்” என்றார்.