வெங்காய ஏற்றுமதிக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் வெங்காயத்தின் விலை தொடர்ந்து வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை வெங்காயத்திற்கு 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெங்காயத்தைப் போலவே உருளைக்கிழங்கின் விலையும் தொடர் உயர்வை பதிவு செய்துள்ளது. 2023-24 சீசனில் 3 லட்சம் டன் வெங்காயத்தை பத்திரமாக இருப்பு வைக்க அரசு முடிவு செய்திருந்தது. 2022-23 ஆம் ஆண்டில், 2.51 லட்சம் டன் வெங்காயத்தை மட்டுமே இருப்பில் பராமரித்தது. நாட்டில் வெங்காயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவும் விலையைபக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.
ஏப்ரல்-ஜூன் காலத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம், இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதுவே வெங்காயம் மீண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் வரை நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.விநியோகும் குறையும் பருவத்தில், மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விநியோகிப்படுகின்றன.