உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..
ஹல்ட்வானியில் உள்ள சிறையில் ஹெச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசீலா திவாரி மருத்துவமனையின் மருத்துவர் பரம்ஜித் சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. டாக்டர் சிங் இதுகுறித்து பேசிய போது “ ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனது குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.
ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட எந்த கைதிக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். தற்போது அந்த சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர்.. அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகமும் கைதிகளின் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.