fbpx

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் பலி..!! நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்..!!

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பார்வையிட 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்ததை அடுத்து, அதில் பயணம் செய்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதியது. மூழ்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட அந்த கப்பல், 3 மணி நேரத்தில் நீரில் முழுவதுமாக மூழ்கியது. இந்த விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1,500 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக இது பார்க்கப்படுகிறது. கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கிடந்தது 1985ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால், கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.

அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்துச் செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும். இந்நிலையில், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக கடந்த 19ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி மூலம் 5 பேர் ஆழ்கடல் சுற்றுலாச் சென்றனர். அதில் 3 சுற்றுலா பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 5 பேர் இருந்தனர்.

கனடாவின் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து பயணத்தை தொடங்கிய சுமார் 2 மணி நேரத்திலேயே நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, நீர்மூழ்கியை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கியில் சென்ற 5 பேரையும் இழந்துவிட்டதாக ஓஷன்கேட் நிறுவனமும் கூறியுள்ளது. டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டன் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ள அமெரிக்க கடலோரப் படை, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’வாடிவாசல்’ படத்தில் இருந்து விலகிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்..? வெற்றிமாறன் தான் காரணமா..?

Fri Jun 23 , 2023
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராக இருக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். வாடிவாசல் படத்தின் தாமதத்திற்கு வெற்றிமாறன் தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் விடுதலை 2 படத்தில் பிசியானதால் வாடிவாசல் படப்பிடிப்பை அடுத்தாண்டுக்கு தள்ளிவைத்துள்ளனர். சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து தான் வாடிவாசல் திரைப்படம் […]
’வாடிவாசல்’ படத்தில் இருந்து விலகிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்..? வெற்றிமாறன் தான் காரணமா..?

You May Like