காவல்துறையில் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ படை இணை இயக்குனர் மேஜர் வி.எஸ்.
ஜெயக்குமார் தமிழக அரசுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் 5சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும், முன்னாள் ராணுவ வீரர்கள் இளம் வயதில் ராணுவ படையில் இருந்து ஓய்வு பெறுவதால், வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்காக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சிறப்பு விதிகளின்படி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 படி ‘ C பிரிவில் ‘ (சி பிரிவு என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் காவலர் வரை) 5 சதவீதம் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் வழங்கி அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் என மொத்தம் 3,552 காலிப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. தற்போது ஏற்கனவே அறிவித்த மொத்த காலிப் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினருக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.