ஒடிசா மாநிலம் பாலசோர் எனும் இடத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்து வனப்பகுதியில் நடந்துள்ளதாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து அறிந்துகொள்ள +91 67822 62286 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.