பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு காரணமாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று மாலை வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.