30 வயது தாண்டியும் தங்களுக்கு திருமணமாகவில்லையே என்று 90ஸ் கிட்ஸ் பலர் ஏக்கத்தில் தவிக்கும் நிலையில், இங்கு ஒரு முதியவர் தனது 71-வது வயதில் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். அதுவும் பெண் வேண்டும் என அரசு அலுவலகங்களை சுற்றி வருகிறார். முதியவருக்கு இந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருவதற்கு ஒரு வினோத காரணமும் உள்ளது.
ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சத்பீர் சிங் (71). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவரது பிள்ளைகளோ டெல்லிக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். தனது கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் தனியாக வசித்து வரும் இவருக்கு, சமீப காலமாக அரசு நல திட்டங்கள் ஏதும் முறையாக கிடைக்கவில்லையாம். ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்திலும் குடும்பஸ்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏதும் சத்பீருக்கு கிடைப்பதில்லை. அரசு சலுகைகளுக்காக அலுவலகங்களின் படியேறி படியேறி அலுத்து போனதுதான் மிச்சம்.
இதனால், சத்பீர் சிங் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். திருமணத்தின் போது மணமகன் தலையில் அணியும் அலங்கார தொப்பியை அணிந்து கொண்டு அரசு அலுவலகங்களில் வலம் வரும் சத்பீர் தான் திருமணம் செய்து மீண்டும் குடும்பதஸ்தானாக தயார் என்று சிக்னல் கொடுக்க ஆரம்பித்தார். முதியவரின் இந்த வினோத செயலால் திகைத்து போன அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என முதியவர் சத்பீருக்கு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.