பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். அந்த நாட்களில் மக்கள் ATM-களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு அறிவித்தது தவறான முடிவு. இத்தகைய முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது. இதில், தடை விதிக்கப்பட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்’’ என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.