ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படி நீண்ட காலமாக விண்வெளியில் தங்கியிருப்பதால், அறிவியலாளர்கள் கருத்துப்படி, அவரது உடலில் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்தார். அதன்படி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 என்ற மீட்பு விண்கலத்தை அனுப்பி சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோரை மீட்க துரித நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கடந்த 13ம் தேதி இந்த ராக்கெட் புறப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, சுனிதா, வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக 4 பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அங்கு புதிய குழுவினரை சுனிதா உள்ளிட்ட வீரர்கள் கைகுலுக்கி விண்வெளி நிலையத்திற்கு வரவேற்றனர்.
இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 வீரர்கள் இன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் புறப்பாடு தொடங்க இருக்கிறது. அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடா கடலில் விண்கலம் தரையிறங்கும். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.