உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சற்று முன்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. லக்னோ , நொய்டா, காசியாபாத் , கான்பூர் மற்றும் ஆக்ராவில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் 11ம் தேதி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து உஷார்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை , கடலூர், திருவாரூர் , மயிலாடுதுறை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , வேலூர் , ஈரோடு, நாமக்கல் , காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் வட மாவட்டங்களான பாகல்கோட், பெலகாவி , தார்வாட் , கடக், கலபுரகி , ராய்ச்சூர், கொப்பல் , யாதகிரி , விஜயபுரா போன்ற மாவட்டங்களுக்அக்டோபர் 11ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.