இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி, 60 சவரன் நகைகளை மிரட்டி வாங்கியதாக இளைஞர் மீது சிறுமியின் பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது சிறுமி, கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்ட சதீஷ்குமார், சிறுமியிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி, அதனை விற்று மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார்.
![இன்ஸ்டா காதலனுக்கு 60 சவரன் நகைகளை அள்ளிக் கொடுத்த 16 வயது சிறுமி..! பகீர் சம்பவம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/05/insta-1.jpg)
இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதனுள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் கேட்டபோது, சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி 60 சவரன் நகையை மிரட்டி வாங்கிய சதீஷ்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![இன்ஸ்டா காதலனுக்கு 60 சவரன் நகைகளை அள்ளிக் கொடுத்த 16 வயது சிறுமி..! பகீர் சம்பவம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/Gold.jpg)
இணையத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே, செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்கடி கவனிக்க வேண்டும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகளின் பெற்றோர் மருத்துவர் ஆலோசனைப் படி குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.