திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டா வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவரது 16 வயது மகளுக்கும் திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளர். இதுகுறித்து தந்தை காளையார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, அந்த சிறுமி இன்ஸ்டாகிராம் வாலிபரை திருமணம் செய்து கொண்டு பல்லடம் கணபதிபாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடியிருந்து வந்தது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து, உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை சிவபிரகாசுக்கு ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அந்த வாலிபர். இதையடுத்து, பல்லடம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.