மத்திய-மாநில அரசுகள் அனைத்து மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க மேகாலயாவில் ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் அருவருக்கத்தக்கச் செயலை செய்துள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆங்கிலம் பேசத் தெரியாமல் மாநில மொழியில் பேசியுள்ளார். இதனால், அப்பள்ளியின் ஆசிரியர் அந்த மாணவனைத் தண்டிக்கும் விதமாக அவரின் கழுத்தில் அழுக்கான செருப்பு மாலை அணிவித்து சக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் முன்னிலையில் பரேட் செய்ய வைத்துள்ளார். இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த மாணவன், தனக்குப் பள்ளியில் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, “பள்ளியின் இந்த செயல் மிகவும் தவறானது, சட்ட விரோதமானதும் கூட. ஆசிரியரின் அந்த செயலால் எனது மகன் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாணவரின் பெற்றோர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ரக்கம் ஏ. சங்மா, ‘இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையரிடமும், கல்வித்துறை அதிகாரியிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் கிடைத்தவுடன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.