டெல்லி விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் ஒன்று வந்து தரை இறங்கியுள்ளது. அந்த விமானத்தின் இருக்கையின் பின்புறம் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, இந்தி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. இதனை கவனித்த பயணி விமான சிப்பந்திகளிடம் இதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக விமான நிறுவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விமானம் தனி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம், வெடிகுண்டை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் செய்தியை எழுதிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.