சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அலசநத்தனம் பகுதியைச் சேர்ந்தவர் முனி கிருஷ்ணன். அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், தனது நண்பர்கள் சீனிவாஸ், பசவராஜ், மஞ்சுநாத், சந்திரப்பா ஆகியோருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றுள்ளார். பின்னர், மீண்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த கார் சிட்டான்டா அல்லி புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தடுப்பு சுவரில் மோதி அங்கு சாலையோரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியது.
இந்த விபத்தில் முனி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனே போலீசுக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், மகேந்திரமங்கலம் போலீசார் முனிகிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காரில் பயணித்த மற்றவர்கள் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பெற்று வந்த பசவராஜ் மற்றும் சீனிவாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.