கடலூர் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே கடந்த மாதம் தகராறு நடந்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் இரண்டு தரப்பு மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏழு பேர் திடீரென வடக்கு திட்டை மாணவர்களுடன் தகராறு செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பு மாணவர்களும் பள்ளி வளாகத்திலேயே தாக்கிக் கொண்டனர். மேலும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டை போட்டனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை விலக்கினர். இந்நிலையில் இரண்டு ஊர்களை சேர்ந்த மாணவர்களும், புவனகிரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆதிவராகநல்லூரை சேர்ந்த ஏழு மாணவர்கள் மீதும், வடக்கு திட்டையை சேர்ந்த நான்கு மாணவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.