உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரை சேர்ந்தவர் ரோஷ்னி (21). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்நிலையில், ரோஷ்னி கல்லூரியில் நேற்று தேர்வு எழுதியுள்ளார். காலை தேர்வு எழுதிவிட்டு ரோஷ்னி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரோஷ்னியை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரோஷ்னியை சரமாரியாக சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரும் அங்கிருந்து பைக்கில் உடனடியாக தப்பிச்சென்றனர்.
கல்லூரி மாணவி ரோஷ்னி பட்டப்பகலில் நடு ரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி ரோஷ்னியை சுட்டுக்கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.