மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் தன்னுடைய கனவை நிஜமாக்கும் வகையில் டைட்டானிக் வீடு கட்டியுள்ளது அனைவரிடமும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹெலன்சாவில் வசிக்கும் மின்டோரா என்ற மனிதர் தனது கனவு இல்லத்தை நீண்ட கால ஆசையின் காரணமாக கப்பலின் வடிவில் கட்டியுள்ளார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சிலிகுறியில் உள்ள ஃபசிடவா பகுதியில் இவரது குடும்பம் மொத்தமாக குடி பெயர்ந்துள்ளது. தற்போது விவசாயம் செய்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் தனது வாழ்வை கழித்து வரும் இவர் தன்னுடைய தந்தையின் காலத்தில் இந்த பகுதிக்கு குடி பெயர்ந்தாராம்.
இவ்வாறு காலப்போக்கில் இவருக்கு தன்னுடைய கனவு இல்லத்தை கப்பலின் வடிவில் கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது. இவர் கொல்கத்தாவில் வாழ்ந்த போதிலிருந்தே தன்னுடைய கனவு இல்லத்தை கப்பலின் வடிவத்தில் கட்ட வேண்டும் என்பது இவருடைய ஆசையாம். இதற்காக பல்வேறு பொறியாளர்களை அணுகியும் அவர்கள் இவருடைய இந்த எண்ணத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்ளவில்லை. இதன் காரணமாக மற்ற யாரையும் நம்பி பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், தானே தன்னுடைய சுய முயற்சியால் இந்த கப்பல் வீட்டை கட்டியுள்ளார்.
ஆனால் இவர் வீடு கட்ட ஆரம்பித்து சில நாட்களிலேயே பணப்பற்றாக்குறை ஏற்பட தன்னுடைய வீட்டை கட்டுவதற்காக நேபாளத்திற்கு சென்று மூன்று வருடங்கள் கட்டுமான வேலை செய்துள்ளார். இதிலிருந்து பெற்ற கட்டுமான அனுபவத்தின் மூலமும், அளப்பரிய ஆர்வமும் தன்னுடைய வீட்டை சிறப்பாக கட்டுவதற்கு உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் இந்த வீட்டை கட்ட ஆரம்பித்துள்ளார். 39 அடி நீளமும் 13 அடி அகலமும 30 அடி உயரமும் கொண்டுள்ளவாறு இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதிக்கு வரும் அனைவரும் இந்த வீட்டை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதைப் பற்றி மிண்டு கூறுகையில், தன்னுடைய தாயின் பெயரை அவரது கப்பல் வீட்டிற்கு வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். தற்போது வரை இந்த இந்த வீட்டின் கட்டுமானத்திற்கு 15 லட்சம் ரூபாய் வரை இவர் செலவு செய்துள்ளார். அடுத்த வருடம் இந்த வீட்டை முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு இந்த வீட்டிற்கு மேல் தளத்தில் ஒரு உணவகத்தை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.