சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 8ஆம் தேதி அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக் சாகசத்தில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ், முகமது சைபான் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
![பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபருக்கு நூதன தண்டனை..! சென்னை ஐகோர்ட் அதிரடி](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/768-512-16540639-thumbnail-3x2-racer.jpg)
இதனையடுத்து பினோய் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற நிலையில், அவருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நூதன நிபந்தனை ஒன்றை வழங்கி உள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக, 3 வாரங்களுக்கு திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையும் விழிப்புணர்வு பிரசுரங்களை தேனாம்பேட்டை சிக்னலில் வழங்க வேண்டும். செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை 5 நாட்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் வார்ட் பாயாக தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் இன்று காலை பினோய், அண்ணா அறிவலயம் அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.