நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கும், அவருக்கு ஆதரவாக இருந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தன்னை திருமணம் செய்துவிட்டு சீமான் ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் 13 ஆண்டுகால புகாராக உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இது தொடர்பாக சென்னை காவல்துறையில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். ஆனால், அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பெங்களூரு சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தொடர்ச்சியான புகார்களை கூறி வந்தார்.
பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி உதவியுடன் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதே சமயத்தில் சீமான் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தனது நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திசை திருப்புவதற்காகவே இத்தகைய புகார்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார் சீமான். இந்நிலையில், உதகையில் இருந்த சீமானை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், உதகையில் இருந்து கோவை வந்த சீமான், அப்படி எந்த ஒரு போலீசும் தம்மை தேடி வரவில்லை. தாம் சென்னைக்குதான் போக இருக்கிறேன். அதனால் சென்னையில் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தலாம் என்றார்.
இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தனியார் செய்தி தொலைக்காட்சியின் நெறியாளரை முன்வைத்து இருவருக்கும் இடையே மோதல் நிகழ்ந்துள்ளது. இதனை விஜயலட்சுமி வீடியோ பதிவு மூலம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அந்த வீடியோவிலும் விஜயலட்சுமி போலீசுக்கு போவேன்.. மிதிச்சுடுவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் விஜயலட்சுமிக்கு உதவியவர்கள், அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என மிரட்டும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பொய் புகார் சொல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.