சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சமிபத்தில் தெரிவித்தது.
அதன் அடிப்படையில்; முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் குழுக்களின் மூலம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.