மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் மிகப் பெரிய மலைத் தொடர் ஆகும். தழிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை நீண்டு 1600 கி.மீ. தொலைவுக்கு பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. 35 சிகரங்களைக் கொண்ட இம்மலைத் தொடரில் இந்தியாவிலேயே அதிக அளவில் யானைகள் உள்ளன. இதுதவிர, புலி, சிறுத்தை, ஆடு இனங்கள் உள்ளிட்ட 139 வகை பாலூட்டி விலங்குகள் உள்ளன. 7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், மூலிகைச்செடிகள், 10 வகையான காட்டுத் தேனீக்கள், 6,000 வகையான பூச்சிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான நீர், நில வாழ்வன, 288 வகையான மீன் வகைகள் உள்ளன.
இந்தியாவின் பல்லுயிர்த்தன்மையை காப்பதில் மேற்கு தொடர்ச்சி மலை முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மலைத்தொடரின் மற்றொரு அதிசயம் தான் மகாராஷ்டிராவில் இருக்கும் ஒளிரும் காடு. மகாராஷ்டிராவின் பீமாஷங்கர் காடு தான் இந்த சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஒளிரும் காடானது சூரியன் மறையும் வரையில் சாதாரண ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் இரவில் ஒருவித பச்சை நிற ஒளி ஆங்காங்கே உமிழப்படுவதைப் பார்க்க முடியும். நினைத்துப்பார்க்கவே மர்மமாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு காரணம் ஒளிரும் பூஞ்சைகள் தான்.
இந்த ஒளியானது மிகமிக அரிதாக சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இதனை தேவதையின் தீ அல்லது நரி நெருப்பு என்று அழைக்கின்றனர். அழுகிய மரங்களும் அதில் வளரும் பூஞ்சைகளும் தான் இந்த வெளிச்சத்துக்கு காரணம். பூஞ்சைகளில் காணப்படும் லூசிஃபெரேஸ் என்ற ஆக்ஸிஜனேற்ற நொதிகள் ( oxidative enzyme ) அழுகிய மரங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட (light-emitting substance) பொருளுடன் தொடர்புகொள்ளும் போது இந்த ஒளியானது உருவாகிறது. இம்மாதிரியான ஒளி உமிழ் உயிரினங்களை நீரில் காண்பதை விட நிலத்தில் காண்பது மிகக் கடினம். 10,000 ஒளி உமிழ் பூஞ்சைகளில் 70 மட்டுமே இந்த ஒளி உமிழ் தன்மையுடன் இருக்கின்றன.