உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் மாத் லட்சுமி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 வயது சிறுமி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக காலை பள்ளிக்கு சென்று, மாலை டியூசன் முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு தான் வீடு திரும்புவார். இந்நிலையில், சம்பவத்தன்று 16 வயது சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர், அந்த சிறுமியை அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை சிறுமி தடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், சிறுமியை வலுக்கட்டாயமாக கிருமிநாசினியை குடிக்க வைத்தனர். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர், அந்த இளைஞர்களை தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக படம் எடுத்த அந்த கும்பல், அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தது.
பின்னர், அந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. உடனே இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கிரிநாசினியை குடித்ததால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.