கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் அருகேயுள்ள புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (28). இவரது கணவர் அருண் (34). சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு பருமலா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவம் முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாரான சினேகாவை, நேற்று நர்ஸ் வேடமணிந்து வந்த ஒரு பெண் கொலை செய்ய முயன்றார். அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை எடுத்து சினேகாவும் அவரது தாயாரும் கூக்குரலிட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்து நர்ஸ் வேடமிட்டு வந்த பெண் தப்பி ஓடினார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண் சினேகா கணவரின் கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், கண்டல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனுஷா (25). இவர், மருந்தாளுனராக உள்ளார். சினேகாவின் கணவர் அருணும், அனுஷாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
ஆனால், பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து அருண், சினேகாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷா 2 முறை திருமணம் செய்து கொண்டார். தற்போதைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். சமீபத்தில் அனுஷாவும், அருணும் மீண்டும் நெருங்கி பழகியுள்ளனர். அனுஷா தனது கள்ளக்காதலனின் மனைவி சினேகாவை மருந்தில்லா காலி ஊசியை நரம்புகளில் குத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. சினேகாவை கொன்று அருணை அடைய வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சி, உறவினர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது.