தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது, வரும் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை…
இன்று முதல் அடுத்த 5 நாட்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை…
இன்று (மே 6) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே 7, 8ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே 9ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மே 10ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 7ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.