COVID-19: ஜெர்மனியை சேர்ந்த முதியவர் இதுவரை மொத்தம் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டு கொண்ட சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா எனும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவலாக உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸின் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளி, முகக்கவசம், ஊரடங்கு என வைரஸ் பரவல் உலகமே முடங்கிபோனது. இன்றளவும் இதன் மாறுபாடுகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகே இதன் தாக்கம் சற்று குறைந்தது. 2021 ஜனவரியில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் ஃபைசர், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷில்டு தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும் பஙகாற்றின. கொரோனா வைரஸ் பல அலைகளாக உருவெடுத்ததால், இரண்டு, மூன்று டோஸ் வரை தடுப்பூசிகள் போடப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. எனினும் அறிவியல் பூர்வமாக இது 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை. அந்த சமயங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் மத்தியில் அச்சம் இருந்தது.
இந்தநிலையில், ஜெர்மனியின் மக்தேபர்க் நகரில் வசித்து வருபவர் 62 வயது முதியவர். இவர் கடந்த ஜூன் 2021 முதல் நவம்பர் 2023 வரை 29 மாத கால இடைவெளிகளில் 217 முறை கொரோனா தடுப்பூசிகளை போட்டு இருக்கிறார். எந்த ஒரு மருத்துவ பரிசோதனைக்காகவும் இப்படி தாறுமாறாக தடுப்பூசி போடவில்லை. தானாக விருப்பப்பட்டே இப்படி தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார்.
134 முறை முறைப்படி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த முதியவர் மீதமுள்ள 83 சுயமாகவே போட்டுள்ளாராம். அது போக 29 மாதங்களிலும் தொடர்ச்சியாக கொரோனா தனக்கு உள்ள என தெரிந்து கொள்ள பிசிஆர் மற்றும் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
அளவுக்கதிமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதால் அவரது உடல் நலனில் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா? என மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தார்களாம். அதில் எதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனினும், அவரிடம் பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக மாதிரிகளை வழங்கவும் அந்த முதியவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதிலே அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், அவருக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை. இப்படி 217 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அவருக்கு கூடுதலாக வைரஸ்க்கு எதிராக எந்த பலமும் கிடைக்க போவது இல்லை” என்றார்.