சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி எனும் 49 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை போலீஸார் வெளியிட்ட தகவலில், ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி படித்தது 12ஆம் வகுப்பு மட்டுமே. ஆனால், சைபர் குற்றங்களுக்கு என்னென்ன தேவையோ அதனை மட்டும்கற்று தேர்ந்துள்ளார். அதன் பிறகு ஒரு குழு அமைத்து, பெரும்பாலும் பெண்களை போலீஸ் அதிகாரி போல பேச வைத்து, ஒரு நபரை குறிவைத்து, அவருக்கு பார்சல் வந்துள்ளது என கூறி, அதில் துப்பாக்கி, ஆயுதங்கள் வந்துள்ளதாக பொய்யாக கூறி, பின்னர் அதில் இருந்து தப்பிக்க வழிகள் கூறி அதன் மூலம் தாடியின் கும்பல் பணம் பறித்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சைபர் கிரைம் குற்றவாளி வங்கி கணக்கில் இருந்து தினமும் 5 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பல நாட்களாக தேடப்பட்டு வந்த சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடியை ஹைதராபாத்தில் உள்ள ஒரு விலையுயர்ந்த தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது பங்கூர் நகர் காவல் நிலையக் குழு மூலம் கைது செய்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.