உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ICU வார்டில் மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் அவரது சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பூனம் வர்மா தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், சாந்தினி குமாரிக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண்முன்னே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.