குரங்கு அம்மை எனப்படும் மங்கிபாக்ஸ் நோய்க்கு புதிய பெயரை பரிந்துரைக்கும்படி உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மங்கிபாக்ஸ் நோயால் உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும், பாரபட்சமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வந்ததால், வைரஸ் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்த்து ரோமன் நம்பர்களை பயன்படுத்தி பெயர் சூட்ட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி, குரங்கு அம்மை நோய் மற்றும் வைரஸ் பெயர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. மேலும், மாறுபாடு கொண்ட குரங்கு அம்மைகளுக்கு பிராந்திய அடிப்படையிலான பெயர்களுக்குப் பதிலாக, புதிய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1 என்றும், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 2 எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.