கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் கதை பாண்டியர்களுக்கும், சோழர்களுக்குமான பகையை பற்றியது. சோழர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த புதினம் எழுதப்பட்டுள்ளது.
பாண்டிய நாடான மதுரையில் உள்ளவர்கள் இந்த படத்தை கலாய்த்து இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், “சோழர்களே! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சிய கும்பிட்டோமா, தியேட்டர்ல படத்தை ஓட்டுனோமா, புரோட்டாவை திண்டோமானு போயிட்டே இருக்கணும்… அத விட்டுபுட்டு மறுபடியும் ஏதாவது எசக்கு பிசக்கா பண்ணனும்னு நினைச்சா அப்புறம் அவ்வளவுதான்…” என்று நகைச்சுவை கலந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அவற்றைத் தாண்டி செல்பவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.