சென்னை ஐக்கோர்ட்டின் 16 சிவில் நீதிபதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தற்போது வழக்காடும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; இரண்டாவதாக உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களிலேயே குறைந்தது 3 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும். சட்ட மாணவர்களாக இருந்தால் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலம் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் (அ) மலையாளம் (அ) தெலுங்கு மொழி எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும்,10ம் வகுப்பில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படிக்காத தேர்வர்கள், சிவில் நீதிபதியாக பதவியேற்ற பிறகு தமிழ் திறனறிவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வழக்கறிஞர்கள் வயது 35-க்கு கீழ் இருக்க வேண்டும். பட்டியல் கண்ட சாதிகள்/ பழங்குடி வகுப்பினர், இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. சட்ட கல்வி மாணவர்கள் வயது 27-க்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination), முதன்மைத் தேர்வு (Main Examination), வாய்மொழித் தேர்வு (Viva–Voce Test), ஆகிய நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். முதன்மைத் தேர்வில் விரிவான வகையில் விடையளிக்க வேண்டும்.இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.2000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பப் படிவம் சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆகும்.