2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையை பின்பற்றினார்.
இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த வழக்கில் 2011இல் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2017இல் ஆண்டு விடுதலையாகினர்.
ஆனால் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக 2018இல் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தினசரி விசாரணையும் நடைபெற்று வருகிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என வாதிட்டார். இதனை நீதிபதி தினேஷ்குமார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் இந்த வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அக். 31ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.