கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் போஸ்டர்கள் ஒடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், காவி நிறத்தில், சாமியார் உருவம் இருப்பது போல் அச்சிடப்பட்டு அவரது பின்புறத்தில் கதிர்கள் வீசுவது போல் உள்ளது. மேலும், ”காணவில்லை… டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்று சொன்ன நபரைத் தேடுகிறோம்” என அச்சிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பிரதமர் மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்தார். அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காகவும், மோடியை பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டி.ஆர்.லோகநாதன் கூறும்போது, “இதுதொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியாது. யார் இந்த சுவரொட்டியை ஒட்டியது என போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த சுவரொட்டியால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.