மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜிதேந்திரா என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி போடும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, அவர் ஒரே ஊசியை வைத்து சுமார் 30 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளார். இதைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பணியாளரிடம் தங்களின் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு அந்த பணியாளர், இதில் என் தவறு எதுவும் இல்லை நிர்வாகம் எனக்கு ஒரு சிரஞ்ச் மட்டும் தான் தந்துள்ளது. இதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று அலட்சியமாக கேட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்தவர்கள்.
இதைதொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் எழுப்பிய புகாரின் பேரில் அந்த பணியாளர் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அந்த மாவட்ட தடுப்பூசி திட்ட பிரிவு தலைமை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர், ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எச்ஐவி பாதிப்பு பரவலுக்குப் பிறகு நாட்டில் 1990களில் இருந்து ஒரு முறை பயன்படுத்தும் டிஸ்போசபல் ஊசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.