உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பவானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 23ஆம் தேதி மாயமாகியுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், இளம்பெண்ணை காணவில்லை என போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின்போது, மாயமான இளம்பெண்ணின் சகோதரியின் கணவர் ஆதிஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சகோதரியின் கணவர் ஆதிஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாயமான இளம்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், அந்தப் பெண் மறுத்துவிட்டார். சம்பவம் நடந்த நாளில், ஆதிஷ் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, உண்மை வெளியே தெரிந்துவிடும் என நினைத்து, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.
இதையடுத்து, எரிந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆதிஷை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.