அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்து சேர்வாமடம் கிராமத்தில் வில்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர் வில்வேந்திரன் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை வில்வேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அடிக்கடி சிறுமியுடன் உல்லாசம் இருந்ததால், திடீரென சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் இதற்கு காரணமான நபர் குறித்து கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் வில்வேந்திரனிடம் திருமணம் செய்யுமாறு, சிறுமி வற்புறுத்தியுள்ளார். ஆனால் வில்வேந்திரன் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இதனால் வேறுவழியின்றி சிறுமியின் குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, தனியார் பள்ளி ஆசிரியரான வில்வேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.