மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் இன்று (பிப்ரவரி 18) நிகழ்ந்த சாலை விபத்தில், 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அசித் யாதவ் கூறுகையில், ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே அதிகாலை 5 மணியளவில் திருமண விழாவில் இருந்து ஒரு கூட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு வந்தவர்களில் சிலர் வேனில் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீதும் அவர்களின் வேன் மீதும் பயங்கரமாக மோதியது.
மேலும், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிப்பர் லாரி வேன் மீது மோதியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பிந்த் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சாலை விபத்தில் இறந்தவரின் உறவினர் ஒருவர் பேசுகையில், ”சிலர் திருமணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் ஏற்றிச் செல்ல அமர வைக்கப்பட்டனர். பின்னால், பைக்கில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையில், எங்கிருந்தோ வேகமாக வந்த ஒரு லாரி, எங்கள் வேன் மீது மோதியது” என்று தெரிவித்துள்ளார்.